மலைப்பொழிவு
1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர,
அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
பேறுபெற்றோர்
(லூக் 6:20-23)
3 "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4 துயருறுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
[1]
5 கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
[2] [3]
6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
[4]
7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
[5]
9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
[6]
11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி,
உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது
நீங்கள் பேறுபெற்றவர்களே!
[7]
12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்!
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும்
அவர்கள் துன்புறுத்தினார்கள்.
[8]
உப்பும் ஒளியும்
(மாற் 9:50; லூக் 14:34-35)
13 நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்.
உப்பு உவர்ப்பற்றுப் போனால்
எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?
அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்;
வேறு ஒன்றுக்கும் உதவாது.
[9]
14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
[10]
15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை;
மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர்.
அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.
[11]
16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
[12]
திருச்சட்டம் நிறைவேறுதல்
17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ
நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்;
அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
[13]
18 விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும்.
அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
[14]
19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி
அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர்
விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ
விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட
உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்.
இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என
உங்களுக்குச் சொல்கிறேன்.
சினங்கொள்ளுதல்
21 "கொலை செய்யாதே;
கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று
முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[15]
22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
"தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர்
தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்;
தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்;
'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப்
பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது
உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல்
ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப்
போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது
வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள்.
இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார்.
நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல்
அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என
உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
விபசாரம்
(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)
27 " 'விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[16]
28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும்
தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால்
அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட
உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
[17]
30உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்
அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட
உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
[18]
31 'தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும்
மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.
[19]
32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி
வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது.
அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.
விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.
[20]
ஆணையிடுதல்
33 "மேலும், 'பொய்யாணை இடாதீர்.
ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று
முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[21]
34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
ஆணையிடவே வேண்டாம்.
விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்;
ஏனென்றால் அது கடவுளின் அரியணை. [22]
35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்;
ஏனெனில் அது அவரின் கால்மணை.
எருசலேம் மேலும் வேண்டாம்;
ஏனெனில் அது பேரரசரின் நகரம்.
36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்;
ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும்
வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
37 ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும்
'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்.
இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
பழி வாங்குதல்
(லூக் 6:29-30)
38 "'கண்ணுக்குக் கண்', ' பல்லுக்குப் பல்' என்று
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
[23]
39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.
மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு
மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து,
உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால்
உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.
41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால்
அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்;
கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
பகைவரிடம் அன்பாயிருத்தல்
(லூக் 6:27-28, 32-36)
43 "'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக',
'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக்
கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
[24]
44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்;
உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
[25]
45 "இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.
ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும்
தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும்
மழை பெய்யச் செய்கிறார்.
46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே
நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால்
உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?
வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?
47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும்
வாழ்த்துக் கூறுவீர்களானால்
நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன?
பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை
நிறைவுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
[26]- குறிப்புகள்
[1] 5:4 - எசா 61:2
[2] 5:5 - இங்கு பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொற்களுக்குப் பின்னால் உள்ள எபிரேயச் சொற்களின்படி "நிலமிழந்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
[3] 5:5 - திபா 37:11.
[4] 5:6 - எசா 55:1,2.
[5] 5:8 - திபா 24:3,4.
[6] 5:10 - 1 பேது 3:14.
[7] 5:11 - 1 பேது 4:14.
[8] 5:12 - 2 குறி 36:16; திப 7:52.
[9] 5:13 - மாற் 9:30; லூக் 14:34,35.
[10] 5:14 - யோவா 8:12; 9:5.
[11] 5:15 - மாற் 4:21; லூக் 8:16; 11:33.
[12] 5:16 - 1 பேது 2:12.
[13] 5:17 - மாற் 4:21; லூக் 8:16; 11:13.
[14] 5:18 - லூக் 16:17.
[15] 5:21 - விப 20:13; இச 5:17.
[16] 5:27 - விப 20:14; இச 5:18.
[17] 5:29 - மத் 18:9; மாற் 9:47.
[18] 5:30 - மத் 18:18; மாற் 9:43.
[19] 5:31 - இச 24:1-4; மத் 19:7; மாற் 10:4.
[20] 5:32 - மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18; 1 கொரி 7:10,11.
[21] 5:33 - லேவி 19:12; எண் 30:2; இச 23:21.
[22] 5:34 - யாக் 5:12.
[23] 5:38 - விப 21:24; லேவி 24:20; இச 19:21.
[24] 5:43 - லேவி 19:18.
[25] 5:44 - "பகைவரிடம் அன்பு கூருங்கள்" என்னும் சொற்றொடருக்குப் பின் "உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசி கூறுங்கள்; உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைத் தூற்றுகிறவர்களுக்காகவும், துன்புறுத்துகிறவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்" எனவும் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் காணப்படுகிறது.
[26] 5:48 - லேவி 19:2; இச 18:13; 1 யோவா 3:3.